செருக்கு

என்ன நீவருந் திக்கவி படிப்பினும்
எடுத்தகற் பனைமுன்னோர்
சொன்ன தேயலால் நூதன மொன்றிலை;
தொன்மைநூல் பலவாகும்!
முன்னந் நூலெலாந் தந்தவன் நீழலை
முற்றுணர்ந் தனையில்லை
உன்னின் மிக்கவர் பலருளர் கல்வியில்
உள்ளமே! செருக்கன்றே! ---நீதிநூல்-
அகரம் அமுதனதுபக்கம் போய்வந்தேன் ஒருவலம்
அங்கே கண்டதிலே அதிர்ந்து அடங்கியது என்மனம்
அடடா புதிது என்படைப்பு அதிலே எத்துணைப் புல்லரிப்பு
அத்துணைச்செருக்கும் ஒடுங்கியது; ஒருமொழியதனை உணர்த்தியது
எதுதான் புதிது இப்பூமிதனில் என்றே அறிவு புகட்டியது
சொல்லாதெதுவும் சொல்லவில்லை - நாம்
சொல்வதில் எதுவும் புதிதுமில்லை
இல்லாதெதையும் எழுதவில்லை - ஏதும்
இல்லை என்பதும் அறிவுமில்லை
முன்னறிவின்றி முதிர்ச்சி இல்லை - இதை
முன்னம் சொன்னவன் மூடன் இல்லை
இப்படிச் சொல்லி என்னையுந்தான்
கிள்ளிக் கலைத்தது கனவையுந்தான்
இனியொரு செருக்கு எனக்குவந்தால்
இன்னுயிர் சுருக்கு என் இறைவா!
Comments
அருமை படைப்பையா!!
புதுமை செய்கிறோம்; நவினம் படைக்கிறோம் என்று செருக்குடையோர்க்கு நல்ல சாட்டையடி இந்தப் பதிவு!
நற்பணி தொடர்க!
நல்லிடுகை தருக!
சொல்வதில் எதுவும் புதிதுமில்லை//
உண்மை ஐயா! நல்ல படைப்பு! புத்திலக்கியவாணர்களின் செருக்கிற்கு நல்ல அடி!
கருத்துக்கு நன்றி. மீண்டும் வருக.