பூங்கரும்பு கட்டிவைத்து புதுப்பானை நடுவில் வைத்து கும்மியிட்டு குலவையிட்டு குதூகலமாய்ப் பொங்கல் வைப்போம் தான னன்னே (3x) தானன்னா நல்ல தமிழ் மக்களுக்கு நாளும் நன்மை நடக்க வேண்டி தைமாதத் திருநாளில் தரணியெங்கும் பொங்கல் வைப்போம் தான னன்னே (3x) தானன்னா கைகொடுத்து காப்பாற்றும் கடவுள் எங்கள் கதிரவனாம் கரங்குவித்து நன்றி சொல்ல கட்டாயமாய்ப் பொங்கல் வைப்போம் தான னன்னே (3x) தானன்னா ஏர் பூணும் காளைகளை எண்ணத்திலே நிறுத்தி வைத்து எல்லாருமே சேர்ந்து இங்கே இனிமையான பொங்கல் வைப்போம் தான னன்னே (3x) தானன்னா கன்னியர்தம் கைமணமும் கலையோடு காணவேண்டி காணும் பொங்கல் என்று சொல்லி கலகலன்னு பொங்கல் வைப்போம் (பூங்கரும்பு )
என்று பிறப்பாய் என்றிருந்தேன் இன்று நீ பிறந்தாய்.. என்ன பெயர் அப்பா எனக்கு என்பதாய் வாய் திறந்தாய்... எந்தமிழ் எழுத்தெல்லாம் என்னில் தொடங்கு எனக் கேட்க பண்ணிருந்தும் பாட்டெழுதாப் பாவலன் நிலை எனக்கு... இனிய பெயர் தேடி இரவெல்லாம் தவித்தேன் நான் பகல் முழுதும் உனைப் பார்த்தே பார்வை தொலைத்ததனால்... விழியழகைச் சொல்லிவிட ஒருபெயரும் விரலழகைச் சொல்லிவிட ஒரு பெயரும் முக அழகைச் சொல்லிவிட ஒரு பெயரும்- உன் முழு அழகைச் சொல்லிவிட ஒரு பெயரும் உருமாறி ஒலிமாறி ஒன்றன்பின் ஒன்றாய் உனக்காகக் கால்வலித்துக் காத்திருக்க ஒற்றைப் பெயர் கண்டேனே கண்மணியே உனக்கது பிடிக்குதா சொல்...?
Comments